மட்டக்களப்புக்கு 60 கைதிகளும், பொலன்னறுவைக்கு 63 கைதிகளும் அவசரமாக இடமாற்றம்! இராணுவம் மற்றும் STF இன் பலத்த பாதுகாப்புடன் ஒப்படைப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதல் சம்பவத்தையடுத்து, அங்கிருந்த கைதிகள் பாதுகாப்புக் கருதி நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் ஒருகட்டமாக, நேற்று (07) மாலை 6.00 மணியளவில் இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) பலத்த பாதுகாப்புடன் 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு கைதிகளின் வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பிரிவினரால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
400 கைதிகளை மட்டுமே பராமரிக்கக் கூடிய கொள்ளளவைக் கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையில், ஏற்கனவே பல்வேறு இடநெருக்கடிகளுக்கு மத்தியில் 960 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது நீர்கொழும்பிலிருந்து மேலும் 60 கைதிகள் அங்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 1,020 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மேலும் 63 கைதிகள் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் பொலன்னறுவை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள சிறை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




