ஓய்வு பெறும் சுவிட்சர்லாந்து உயர் இஸ்தானிகருக்கு நன்றியும் பாராட்டும்! நேரில் சந்தித்து விடைபெற்றனர் சாணக்கியன் மற்றும் டாக்டர் ப. சத்தியலிங்கம் எம்.பி.க்கள்!
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் ஓய்வு பெறவுள்ள உயர் இஸ்தானிகர் (High Commissioner / Ambassador) அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் டாக்டர் ப. சத்தியலிங்கம் ஆகியோர் இன்றைய தினம் நேரில் சந்தித்துப் பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தனது பணிக்காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அவருக்குத் தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனிதாபிமானத் தேவைகள், நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நிலையான சமாதானத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் அவர் வழங்கிய ஒத்துழைப்பை இதன்போது இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்றியோடு நினைவுகூர்ந்தனர். அதேபோன்று, தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்களை கவனத்துடன் செவிமடுத்து, அவற்றை சர்வதேச மட்டத்தில் புரிந்துகொள்வதற்கான சூழலை உருவாக்க அவர் மேற்கொண்ட பங்களிப்பையும் அவர்கள் பாராட்டினர்.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய விடயங்களில் சுவிட்சர்லாந்து அரசு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவிற்கும் தங்களது நன்றியைத் தெரிவித்த எம்.பி.க்கள், எதிர்காலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் அக்கறையும் அவசியம் என்பதையும் தூதுவரிடம் வலியுறுத்தினர்.
இறுதியாக, ஓய்வுபெற்றுச் செல்லும் உயர் இஸ்தானிகரின் எதிர்காலப் பணிகளிலும் தனிப்பட்ட வாழ்விலும் அனைத்து வெற்றிகளும் நலன்களும் கிட்ட தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்குமிடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியனும், சத்தியலிங்கமும் பகிர்ந்துகொண்டனர்.



