எரிபொருள் QR ஒதுக்கீட்டு நடைமுறை தற்போதைக்கு நீக்கப்படமாட்டாது! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!
எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் சீராக அமையாததன் காரணமாகவே, எரிபொருள் விநியோகத்திற்கான QR நடைமுறையை மேலும் தொடரத் தீர்மானித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
: QR ஒதுக்கீட்டு நடைமுறையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் மூலம், நாட்டில் தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடிவதுடன், நாட்டின் டொலர் இருப்பையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், மீண்டும் யுத்த நிலைமை தீவிரமடைந்தால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் மீண்டும் வரிசைகளில் நின்று அசௌகரியங்களுக்கு உள்ளாவதை முன்கூட்டியே தடுக்க வேண்டியுள்ளது. இதனாலேயே பொதுமக்கள் நலன் கருதி QR நடைமுறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே மேலும் கூறியுள்ளார்.



