2026 ஆம் ஆண்டுக்கான ICC T20 உலகக்கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (மார்ச் 08) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்தியாவின் பலம்: சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்தத் தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தனது பலத்தை நிரூபித்தது. ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி துடுப்பாட்டம் இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 2024 இல் வென்ற கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.
நியூசிலாந்தின் சவால்: மறுபுறம், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐசிசி தொடர்களில் எப்போதும் சவாலான அணியாகத் திகழும் ‘கிவிஸ்’, முதல்முறையாக T20 உலகக்கோப்பையை வெல்லும் இலக்குடன் காத்திருக்கின்றனர். ராச்சின் ரவீந்திரா மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோரின் ஆட்டம் அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கிறது.
எதிர்பார்ப்பு: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகளே மோதியிருந்தன. அதில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், அதற்குப் பழிவாங்குமா நியூசிலாந்து அல்லது இந்தியா மீண்டும் மகுடம் சூடுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


