ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அந்நாட்டின் இராணுவ மற்றும் நிர்வாக முடிவுகளை எடுக்கும் முழுமையான அதிகாரத்தை ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் மத்திய தலைமைத்துவ கட்டமைப்பு சிதைந்துள்ள நிலையில், “போர்க்காலத் தலைமை” (Wartime Leadership) என்ற பெயரில் இந்த அமைப்பு தற்போது இயங்கி வருகிறது.
வழக்கமாக உச்ச தலைவரின் வழிகாட்டலில் இயங்கும் IRGC, தற்போது நிலவும் அசாதாரண போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, அதிகாரப்பகிர்வு முறையில் (Decentralized Command) முடிவுகளை எடுத்து வருகின்றது. ஈரானின் புதிய தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியை (Mojtaba Khamenei) நியமிக்க வேண்டும் என IRGC அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அதுவரை நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான அனைத்து முக்கிய தீர்மானங்களையும் புரட்சிகர காவல் படையே மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) தலைமையிலான இடைக்காலக் குழு நிர்வாக ரீதியாகச் செயற்பட்டாலும், கள யதார்த்தத்தில் IRGC-ன் புதிய தளபதி அஹ்மத் வாஹிதி (Ahmad Vahidi) தலைமையிலான உயர்மட்ட இராணுவக் குழுவே நாட்டின் உண்மையான அதிகார மையமாக மாறியுள்ளதாக சர்வதேச புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை மூடுதல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற அதிரடி முடிவுகள் இந்த அமைப்பினாலேயே தன்னிச்சையாக எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

