அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் இலங்கைக்குத் தெற்கே மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகளையும், தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் பணியாளர்களையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ரொயிட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை (04) காலி கடற்பரப்பிற்கு அப்பால் 19 கடல் மைல் தொலைவில் வைத்து ‘IRIS Dena’ எனும் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்காவினால் டொர்பிடோ தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 87 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் இலங்கை கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் (EEZ) நங்கூரமிட்டுள்ள ‘IRIS Booshehr’ என்ற இரண்டாவது ஈரானியக் கப்பலில் உள்ள 208 பணியாளர்களையும் ஈரானுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தற்காலிக பொறுப்பதிகாரி ஜேன் ஹொவெல் (Jayne Howell) இலங்கை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
மீட்கப்பட்ட இந்த மாலுமிகளை ஈரான் தனது அரசியல் பரப்புரை (Propaganda) நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கே அமெரிக்கா இந்தத் தடையை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இலங்கை ஒரு நடுநிலை நாடாக இந்த விடயத்தைக் கையாளும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது வைத்தியசாலையில் உள்ள 32 மாலுமிகளுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

