உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உத்தியோகபூர்வமாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஹார்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி அதன் ஊடாகப் பயணிக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் ஈரானியப் படைகளால் தீயிட்டு அழிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய வான்பரப்பு மற்றும் கடல் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி (20%) இந்த நீரிணை ஊடாகவே நடைபெறுகிறது. ஈரானின் இந்த அதிரடி முடிவினால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை பாரிய அளவில் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதுடன், இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது குறித்த கடல் பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல நாடுகளின் கப்பல்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளன.

