இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (02) வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு, அமைதியைப் பேணுதல் மற்றும் சமூக வாழ்விற்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள், போக்குவரத்து, நீர் வழங்கல் மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்ட 15 துறைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்த அவசரகால நிலைமை, தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ELankaMirror #SriLankaNews #இலங்கைசெய்தி #BreakingNews #TamilNewsSriLanka

