2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா ஜாஸ்மின், (புலஸ்தினி மகேந்திரன் எனவும் அறியப்படுபவர்) உயிரிழக்கவில்லை என்பது தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உறுதியாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்தவிதமான உறுதியான தகவலும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அவசியம் ஏற்பட்டால், அவரைக் கைது செய்வதற்காக பிடிவாரண்ட் (Arrest Warrant) பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை தொடர்ச்சி
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், தாக்குதல்களின் பின்னணியில் சதி ஏதேனும் உள்ளதா என்பதை புதிய அரசாங்கம் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், இந்த விசாரணை ஆழமான மற்றும் விரிவான விசாரணையாக நடைபெற்று வருவதாகவும் அவர் விளக்கினார்.
தற்போது நடைப்பெற்று வரும் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடியதால், சில முக்கிய விவரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட முடியாது என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.
Source: Parliamentary Proceedings | Ministry of Public Security

