
ஜனாதிபதி அனுரகுமாரவின் கோரிக்கைக்கு இணங்கியது பாகிஸ்தான்!
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விடுத்த விசேட வேண்டுகோளை ஏற்று, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மோதல் என வர்ணிக்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி வரும் பெப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
நேற்று (பெப்ரவரி 09) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது:
- இலங்கையில் போர் நிலவிய காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தான் வழங்கிய வரலாற்று ரீதியிலான ஆதரவை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மதித்து, இந்தப் போட்டியில் பங்கேற்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
- இப்போட்டி நடைபெறாவிட்டால் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் கோரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) அதிரடி உத்தரவு பிறப்பித்தார். “நட்பு நாடுகளின் வேண்டுகோள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் மாண்பினைப் பாதுகாக்கும் நோக்கில், பெப்ரவரி 15 போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும்” என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த திடீர் ‘யு-டர்ன்’ (U-turn) முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வரவேற்றுள்ளது. இலங்கையைத் தொடரை நடத்தும் நாடாக முன்னிலைப்படுத்திய ஜனாதிபதியின் இந்த இராஜதந்திர நடவடிக்கை, உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

