வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் புதிய தலைவர், அமெரிக்காவின் ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் பதவியில் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இன்று (08) ஏபிசி (ABC) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானின் புதிய தலைமை எங்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்ட டிரம்ப், அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்கள் மிக விரைவில் அகற்றப்படுவார்கள் என்றும், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் அமெரிக்கா அங்கு சென்று நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரானின் அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளதாகவும், புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானிய மதகுருமார்கள் சபை (Assembly of Experts) இன்று அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பெயர் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், கொல்லப்பட்ட அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) அந்தப் பதவிக்கு வர அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மொஜ்தபா கமேனி ஒரு “திறமையற்றவர்” (Lightweight) என்று டிரம்ப் ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில், ஈரானின் இந்தப் புதிய தலைமைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

