இலங்கையை உலகின் மிகச்சிறந்த மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (08) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உலகில் எத்தகைய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், மனிதநேயத்தின் கொடியை ஏந்திச் செல்லும் தேசமாக இலங்கை விளங்கும் என உறுதிபடத் தெரிவித்தார். குறிப்பாக, நுண்நிதி கடன் வலையில் சிக்கித் தவிக்கும் கிராமப்புறப் பெண்களை மீட்பதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் எனவும், சொத்து பிணைகள் இல்லாத பெண்களுக்கு அரசாங்கமே உத்தரவாதம் வழங்கி சலுகை வட்டியில் கடன் வழங்கும் விசேட திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
மேலும், இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் அனர்த்தத்தை முழுமையாக ஒழித்து தாய்மார்களின் அச்சத்தைப் போக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் பரிவுணர்வுள்ள எதிர்காலச் சந்ததியினர் உருவாக்கப்படுவர் என்றும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கத் தற்போதைய சட்டங்கள் போதாது எனின் புதிய கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பெண்களின் இதயங்களில் உள்ள துயரச் சுமையைக் குறைத்து, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

