ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு மறுப்பு? – நாளை கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்யப் போவதாக பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் எச்சரிக்கை!
தங்களை உடனடியாக ஆசிரிய சேவையில் உள்வாங்குமாறு கோரி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கடைசிப் பாடசாலை அபிவிருத்தி அதிகாரியும் சற்று நேரத்திற்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (பெப்ரவரி 01) இந்தப் போராட்டம் 7வது நாளாகவும் தொடர்ந்தது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 அதிகாரிகள் அடுத்தடுத்து உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை மாபெரும் போராட்டம்: தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி இதுவரை நேரம் ஒதுக்கவில்லை எனத் தெரிவித்த சங்கத்தினர், நாளை (பெப்ரவரி 02) கொழும்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (03) கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், போராட்டத்தின் தீவிரம் காரணமாக நாளைக்கு முன்னதாகத் தீர்வு வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை, முறையாக ஆசிரியர் சேவையில் இணைக்கக் கோரி கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

