திருகோணமலை நகர கடற்கரை பாதுகாப்பு வலயத்தில் அத்துமீறிய கட்டுமானங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்கள் உள்ளிட்ட 10 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நகர கடற்கரை பாதுகாப்பு வலயத்திற்குள் (Coast Conservation Zone) அனுமதியின்றி தற்காலிக குடில் ஒன்றை அமைத்து, அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி:
- நால்வர் (04) பௌத்த மதகுருமார்கள்.
- ஆறு (06) பொதுமக்கள். என மொத்தம் 10 பேர் எதிர்வரும் புதன்கிழமை (11) வரை சிறையில் வைக்கப்படவுள்ளனர்.
கடற்கரை பாதுகாப்பு சட்டவிதிமுறைகளை மீறியமை மற்றும் அனுமதி இன்றி அரச காணிகளில் கட்டுமானங்களை மேற்கொண்டமை ஆகிய விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

