கடந்த 20-ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட 26 வயதுடைய இளம் தாய், தான் எதிர்கொண்ட அந்தப் பயங்கரமான கடத்தல் சம்பவம் குறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகருக்குச் சென்ற தன்னை, திட்டமிட்டு கடத்திச் சென்று கிணற்றில் வீசிய கும்பல் குறித்து அவர் வழங்கிய வாக்குமூலத்தின் சுருக்கம் வருமாறு:
“அன்று காலை வவுணதீவு சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி மட்டக்களப்பு நகருக்குச் சென்றேன். அங்கு ஒரு நகைக்கடையில் அடகு வைத்திருந்த எனது தங்க மோதிரத்தை 24,000 ரூபா செலுத்தி மீட்டுக்கொண்டேன். இதன்போது முச்சக்கர வண்டியில் என்னுடன் வந்த ஒரு பெண் என்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.”
“மீண்டும் அதே முச்சக்கர வண்டியில் ஏறி வவுணதீவு நோக்கிப் பயணித்தபோது, வலையிறவுப் பாலத்திற்கு அருகில் வைத்து அந்தப் பெண் எனக்கு விளாம்பழக் குளிர்பானம் (Juice) ஒன்றைத் தந்தார். அதனை அருந்திய சில நிமிடங்களில் எனக்கு ஒருவித மயக்க நிலை ஏற்பட்டது.”
“வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கிக்கொண்டார். அதன் பின்னர் ஒரு இளைஞன் கையில் கத்தியுடன் முச்சக்கர வண்டியில் ஏறினார். அவர் ஏன் கத்தியுடன் வருகிறார் என்று கேட்டபோது, மாட்டிற்குப் புல் வெட்டச் செல்வதாகக் கூறினர். ஆனால் முச்சக்கர வண்டி நான் இறங்க வேண்டிய இடத்திற்குச் செல்லாமல் காட்டுப் பகுதியை நோக்கிச் சென்றது. அதன் பின் நான் முழுமையாக மயக்கமடைந்தேன்.”
“நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது கழுத்தளவு தண்ணீருக்குள் இருந்தேன். மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது. நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியாமல் குழப்பமடைந்த நிலையில், தப்பிக்கப் போராடினேன். எனது கணவர் மற்றும் பிள்ளையின் பெயரைச் சொல்லி அலறினேன். எனது சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த சிலர் கயிற்றைப் போட்டு என்னைக் காப்பாற்றினார்கள்.”
தற்போது சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண், தனது பிள்ளை எங்கே? என்ற ஆதங்கத்துடன் பொலிஸாரிடம் இந்த விபரங்களைக் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வவுணதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



