நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் யாருடைய உதவியும் இன்றி இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே நிலவுகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவும் இதனை ஒரு ‘சதித்திட்டம்’ என்றே குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தினார். தற்போதைய அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன அன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, சஹ்ரானுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்ததையும் அவர் சபையில் முன்வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோரைச் சூத்திரதாரிகளாகச் சித்தரிக்க முயற்சித்த போதிலும், நீதிமன்றம் அவர்களை விடுவித்ததாக முஜிபுர் ரஹ்மான் கூறினார். தேர்தல் காலத்தில் சூத்திரதாரிகள் இருப்பதாகக் கூறியவர்கள், இப்போது சஹ்ரானுடன் மாத்திரம் இந்த விசாரணையை முடித்துக்கொள்ளப் பார்ப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்தத் தாக்குதலின் விளைவாக முஸ்லிம் சமூகம் சந்தித்த இழிவு குறித்துப் பேசுகையில் அவர் உணர்ச்சிவசப்பட்டார்:
“இந்தத் தாக்குதலால் தனிப்பட்ட முறையில் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். எனது மகன் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போனது; முஸ்லிம் பெண்கள் கலாசார ஆடைகளை அணிய முடியாத நிலை ஏற்பட்டது. எமது சமூகம் இன்றும் அதன் அழுத்தங்களை அனுபவித்து வருகிறது.”
சஹ்ரானுக்கு உதவியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், மிரட்டல்கள் மூலம் உண்மையை மறைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


